கங்கையின் அழைப்பு
எஸ். அனந்த கிருஷ்ணன், சென்னை
14-5-26
உயிர் தரும் கங்கை,
பாவங்களைப் போக்கும்
பவித்ரமான கங்கை,
கங்கோத்ரியிலிருந்து கடல் வரை
பாயும் உன் புனித ஓடை,
இந்திய மக்களின் உள்ளங்களில்
இன்பம், அமைதி,
பாவ விமோசனம் அளிக்கும்
தெய்வீக அழைப்பாய் ஒலிக்கிறது —
கங்கையின் அழைப்பு.
கோடிக்கணக்கான பக்தர்களை
பக்தி மார்க்கத்தில் நடத்தி,
திருத்தல யாத்திரைக்கு அழைக்கும்
கங்கையின் அழைப்பு.
கங்கோத்ரி தலத்தில்
கங்கை மாதாவின் ஆலயம்,
பகீரதனின் தவப்பெருமை,
மலைவாசல்களின் அழகு,
எங்கும் ஒலிக்கிறது
கங்கையின் அழைப்பு.
ஹர்ஷில், முக்பா பள்ளத்தாக்குகள்,
கங்கை அமைதியாக தங்கும் இடங்கள்,
உத்தரகாசி, ரிஷிகேஷ், ஹரித்வார்,
பிரயாக்ராஜ், காசி வரை
ஆன்மீக ஒளி பரப்பும்
கங்கையின் அழைப்பு.
மோட்சம் அளிப்பவள்,
முன்னோர்களின் ஆன்மாவிற்கு
அமைதி தருபவள்,
துன்பங்களை அகற்றுபவள் —
கங்கையின் அழைப்பு.
வேத மந்திரங்களின் இனிய ஒலி,
காசி கங்கை ஆரத்தியின் மகிமை,
விசுவநாதர், விசாலாட்சி அருள்,
இவை அனைத்திலும் கேட்கிறது
கங்கையின் அழைப்பு.
கங்கை கரையில் வாழும்
மல்லாஹ்கள், புரோகிதர்கள், சந்நியாசிகள்,
அவர்களின் வாழ்வாதாரமும்
உன் அருளாலே —
கங்கையின் அழைப்பு.
ஆசேது ஹிமாசலம் வரை
இந்தியாவின் புண்ணிய நதி,
நாகரிகமும் பண்பாடும் தாங்கும்
ஆன்மீகத் தாய் நீயே —
கங்கையின் அழைப்பு.
ஜெய் ஜெய் கங்கே!
ஜெய் மாதா பகீரதி!
இந்திய ஆன்மாவில் என்றும்
ஒலித்திடட்டும்
கங்கையின் அழைப்பு.
No comments:
Post a Comment