லிங்கபுராணம்
பகுதி 29
பரமன் பார்வதிக்குக் கூறிய யோகம் தேவி கேட்டுக் கொண்டபடி ஈசன் கயிலையில் ஒருநாள் அவருக்கு யோகம் பற்றி எடுத்துரைத்தார். யோகம் ஐந்து வகைப்படும்.
1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.
2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.
3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.
4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.
5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும். மகாயோகத்தை அடைந்தவர், அஷ்டமா சித்திகள் பெறுவர். யோகத்தில் அமருபவர்கள் முதலில் அயனையும், அரியையும் பக்தியுடன் தியானித்து வணங்கி பின்னரே மகேசுவரனைப் பற்றுதல் நினைக்க வேண்டும். இவ்வாறு தான் பெற்ற உபதேசத்தைச் சனத்குமாரர், வியாசருக்குத் தெரிவிக்க, அதனை அவரிடமிருந்து சூதர் அறிந்து கொண்டார். இவ்வாறாக, நைமிசாரணியத்து முனிவர்கள் உள்ளம் மகிழ ஈசன் மகிமையை எடுத்துக்கூறிய சூதர் சிவபெருமான் மலரடிகளைத் தலை தாழ்த்தி வணங்கினார். முனிவர்களும் மகிழ்ச்சியுடன் சென்னி மேல் கைகூப்பி நான்மறைகளால் துதித்தனர். அவ்வமயம், அங்குப் பேரொளி ஒன்று தோன்றியது. அதனிடையே மலரோன் மலர்ந்த முகத்தோடு முனிவர்களுக்குத் தரிசனம் தந்தார். லிங்க புராணத்தைச் சொன்னவரும், கேட்டவரும் கேட்கச் செய்தவரும் சிவலோகத்தை அடைவர் என அருளினார். இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் கொடும் பாவங்கள் நீங்கப் பெற்றவராய் சிவலோக வாழ்வைப் பெற்றுப் பேரின்பம் எய்துவர்.
லிங்கபுராணம்
பகுதி 30
தேவர் துயர்துடைத்த ஐங்கரன் ஒருநாள் ஈசன் உமையுடன் இருக்கும் போது தேவர்கள் அவர்களை அடைந்து வணங்கி தானவர்களால் தாம் படும் வேதனைகளைப் பற்றிக்கூறி, அவர்கள் தொடங்கும் எக்காரியமும் நிறைவேறாமல் இருக்க ஓர் உத்தம புருஷனைத் தோற்றுவிக்கப் பிரார்த்தித்தனர். ஈசன் அவர்களை அனுக்கிரகிப்பதாகக் கூறி அருள் செய்தார். தேவியுடன் அருகில் இருந்த உத்தியானவனத்திற்குச் சென்று ஐங்கரனைத் தோற்றுவிப்போம் என்றார். இருவரும் யானைகளாக மாறி ஓடியாடி மகிழ, அங்கே அப்போதே வேழ முகத்தோன் தோன்றினான். குமாரனைக் கண்டு உச்சி முகந்து மகிழ்ந்தனர். தேவி குழந்தையை மடியில் வைத்து அன்பு செய்ய வேழமுகத்தோன் கீழே இறங்கிக் கைகொட்டி நடனம் புரியலானார். அப்போது பரமன் அவனை அருகழைத்து, நீ என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாகி, கணபதி என்ற பெயர் பெறுவாய். நீ மகிழ்ச்சியுடன் நடனம் புரிவதால் நர்த்தன கணபதி என்று பெயர் பெறுவாய். அனைவரும் உனக்கே முதல் பூஜை செய்ய வேண்டும். உன் அருள் பெற்ற காரியம் இனிது நிறைவேறும். உன்னைப் பூசிக்காமல் செய்தால் தடைகள் (அ) விக்கினங்கள் ஏற்படும். அதனால் உனக்கு விக்கினேச்வரன் என்று பெயர். தானவர்கள் கெ அவர்களின் காரியங்களைத் தடை செய்து தேவர்களைக் காத்திடுவாயாக. அதற்கான சக்தியை உனக்கு அளித்தேன் என்று கூறி விநாயகரை ஆசிர்வாதித்தார் பெருமான். ஈசன் ஐங்கரனுக்கு அளித்த கவுரவங்களைத் தேவி அங்கீகரித்தாள். இந்திராதி தேவர்கள் வேழ முகத்தானை வேண்டித் துதித்தனர். அவர்கள் செய்த துதிகளால் அருள்புரிவதாகக் கூறி அபயம் அளித்தார். அதனால் அசுரர்கள் கொட்டம் குறைந்து, அவர்கள் செய்வன தடை செய்யப்பட்டன.
தொடரும்🙏🙏