லிங்கபுராணம்
பகுதி 29
பரமன் பார்வதிக்குக் கூறிய யோகம் தேவி கேட்டுக் கொண்டபடி ஈசன் கயிலையில் ஒருநாள் அவருக்கு யோகம் பற்றி எடுத்துரைத்தார். யோகம் ஐந்து வகைப்படும்.
1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.
2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.
3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.
4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.
5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும். மகாயோகத்தை அடைந்தவர், அஷ்டமா சித்திகள் பெறுவர். யோகத்தில் அமருபவர்கள் முதலில் அயனையும், அரியையும் பக்தியுடன் தியானித்து வணங்கி பின்னரே மகேசுவரனைப் பற்றுதல் நினைக்க வேண்டும். இவ்வாறு தான் பெற்ற உபதேசத்தைச் சனத்குமாரர், வியாசருக்குத் தெரிவிக்க, அதனை அவரிடமிருந்து சூதர் அறிந்து கொண்டார். இவ்வாறாக, நைமிசாரணியத்து முனிவர்கள் உள்ளம் மகிழ ஈசன் மகிமையை எடுத்துக்கூறிய சூதர் சிவபெருமான் மலரடிகளைத் தலை தாழ்த்தி வணங்கினார். முனிவர்களும் மகிழ்ச்சியுடன் சென்னி மேல் கைகூப்பி நான்மறைகளால் துதித்தனர். அவ்வமயம், அங்குப் பேரொளி ஒன்று தோன்றியது. அதனிடையே மலரோன் மலர்ந்த முகத்தோடு முனிவர்களுக்குத் தரிசனம் தந்தார். லிங்க புராணத்தைச் சொன்னவரும், கேட்டவரும் கேட்கச் செய்தவரும் சிவலோகத்தை அடைவர் என அருளினார். இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் கொடும் பாவங்கள் நீங்கப் பெற்றவராய் சிவலோக வாழ்வைப் பெற்றுப் பேரின்பம் எய்துவர்.
தொடரும்🙏🙏