லிங்கபுராணம்
பகுதி 28
பார்வதி, பரமசிவன் திருமண வைபவம் நிஷ்டை கலைந்து எழுந்த ஈசன் ஒரு முதிய அந்தணர் வடிவில் பார்வதி முன் தோன்ற, உமையும் அவரை யார் என்று அறிந்து உபசரித்து, தன் விருப்பப்படி திருமணம் நிறைவேற அருள்புரிய வேண்டினாள். மகிழ்ச்சியுற்ற மகேசுவரன் சுயஉருவை காட்டி அவ்வாறே ஆகும் என்று கூறி மறைந்தார். நடந்தவற்றை எல்லாம் பார்வதி இமவானிடம் தெரிவித்தாள். அடுத்து இருதரப்பிலும் திருமண ஏற்பாடுகள் நடைபெறலாயின. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் பரமன் வருகையை நோக்கிக் காத்திருந்தனர். உமாதேவி புனித நீராடி புத்தாடை அணிந்து, ஆபரணங்கள் தரித்து அற்புத கோலத்துடன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. திடீரென்று பார்வதியின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பதை அனைவரும் கண்டனர். இந்திரன் அது ஓர் அசுரனோ என எண்ணி அதன்மீது வஜ்ஜிராயுதத்தை ஓங்க, அவன் கை அசைவற்றுப் போயிற்று. மற்றவர்களும் வெகுண்டு எழுந்தனர். நான்முகன் எல்லோரையும் அமைதிப்படுத்தி குழந்தையை நெருங்கி போற்றி வழிபட்டார். இறைவனே குழந்தையாக வந்திருக்கிறார். அவரைப் பணிந்து தொழுது அருளைப் பெறுங்கள் என்று கூறினார். இறைவன் ஜோதியாக தன் சுயஉருவைக் காட்டிட, இமவானும் மேனையும் அவரை வலம் வந்து வணங்கி தமது புத்திரி உமையை மனமுவந்து திருமணம் செய்து கொள்ளுமாறு பிரார்த்தித்தனர். பிரமனும் ஈசனை அணுகி அவரை வணங்கி தேவியின் திருக்கரம் பற்றி அனைவரையும் மகிழ்விக்குமாறு வேண்டினார். அப்போது பரமன், பிரம்மனிடம் விசுவகர்மாவைக் கொண்டு மாளிகைகளை நிர்மாணிக்கச் செய்யுமாறு கூறினார். திருமண முகூர்த்த நேரம் நெருங்கிட, சர்வ அலங்கார பூஷிதராய் ஈசன் உமையவள் திருக்கரத்தைப் பற்றக் காத்திருந்தார். அவருடைய மணக்கோலத்தைக் கண்டு முனிவர்களும், மற்றவர்களும் மகிழ்வுற்றனர். உமாதேவியாரும் புனித நீரால் நீராட்டப்பட்டு, ஆடை அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு லக்ஷ்மி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோர் தேவியைத் தாங்கிவர திருமண மண்டபத்தை அடைந்தாள் பார்வதி. அப்போது அயன், விஷ்ணுவிடம் அவரது உடன்பிறந்தாளைச் சிவபெருமானுக்கு அனைவரும் மகிழ்ந்திட அளிக்குமாறு கூறினார். உடனே மாதவன், பரமன் தாள் பணிந்து வணங்கி, அவரது பாதங்களை கைகளால் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, கங்கை நீரால் கழுவி, நறுமலர்கள் கொண்டு பக்தியுடன் அர்ச்சித்தார். பின்னர் திருமால் ஈசனிடம், தங்களையே பதியாக அடைய அல்லும் பகலும் தேவி தியானித்து வருகிறாள். அவனை மனமுவந்து ஏற்றருள் புரியவேண்டும் என்று வேண்டினார். பிரமன் ஈசனை நெருங்கி அவர் அனுமதி பெற்று, ஹோம காரியங்களைத் தொடங்கினார். பரமன் தேவியுடன் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து எங்கும் ஆனந்தம் பொங்கிட மங்கள நாணைத் தேவிக்கு அணிவித்தார். திருமணம் முடிந்த பின் ஈசன் உமையுடன் புறப்பட்டுக் காசியை அடைந்தார். அங்கே இமவான் லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசன் உருவைத் தியானித்து வழிபட்டு மேனையுடன் மேலான உயர் பதத்தை அடைந்தன்.
நம: பார்வதி பதயே, ஹரஹர மகாதேவ
தொடரும்🙏🙏