Friday, March 24, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --தொண்ணூற்று இரண்டு

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --தொண்ணூற்று இரண்டு

      அவர்கள் ராமருக்கும் அவரின் சகோதரர்களுக்கும்
     எண்ணெய் பூசி  குளிப்பாட்டினார்கள்.
   மிகவும் அன்புடன்  அறுசுவை உண்டி படைத்தனர்.
  நல்ல சந்தர்ப்பம் என அறிந்து ராமர் அன்புடனும் ,
 ஒழுக்கத்துடனும்  தயக்கத்துடனும்   சொன்னார்,--
"மகாராஜா அயோத்தியா செல்ல விரும்புகிறார் .
அவர் எங்களை தங்களிடமிருந்து விடை பெற அனுப்பினார்.  அம்மா! எங்களுக்கு மகிழ்ச்சியுடன்  செல்ல அனுமதியுங்கள்.
  எங்களை   உங்கள் மகன்கள் போல் கருதுங்கள்.
  இவ்வாறு சொன்னதுமே அந்தப்புரத்தில் சோகம் பரவியது.
 மாமியார்கள்  அன்பின் வயத்தால் மௌனமானார்கள்.
 அவர்கள் ராஜ குமாரிகளை அணைத்துக் கொஞ்சி
 கணவர்களுடன் அனுப்பினர்.
ராமரிடம் சீதையை ஒப்படைத்து மிகவும் வேண்டினர்---
எங்கள் குடும்பத்தினருக்கு ,நகரமக்களுக்கு,எனக்கு . அரசனுக்கு  மிகவும் பிரியமானவள் ஜானகி.
 இவளுடைய ஒழுக்கம்,
அன்பு  இரண்டையும் பார்த்து
 அவளை உங்கள் அடிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
  ராமா! நீ முழு நிலவு, நல்ல குணங்களில்  மேன்மை  பொருந்தியவன். நீ அன்பானவன்.  ராமா! நீ பக்தர்களின் குணங்களை ஏற்றுக்கொண்டு  குற்றங்களை மன்னிக்கின்றவன் .
இரக்கத்தின் இருப்பிடம்.
இப்படி சொல்லி ராணி ராமரின்
 பாதங்களைப்பிடித்து மௌனமானாள்.
அவளுடைய குரல் அன்பு என்ற சகதியில்
சிக்கிக்கொண்டு பேச்சு வரவில்லை.
 அன்பான  சொற்களைக்  கேட்டு
  ராமர் மாமியாரை மிகவும் கௌரவித்தான்.
நமஸ்காரம் செய்து தன் சகோதரர்களுடன் புறப்பாட்டார்.
மகள்களைப் பிரிய மனமின்றி ,
மீண்டும் மீண்டும் அழைத்து
அன்பைக் காட்டினர்.
தோழிகள் காட்டாயப் படுத்தி
 ராணிகளைப் பிடித்து அழைத்துவந்தனர் .
தாய்ப்பசுவிடம் இருந்து  கன்றுக்குட்டியைப் பிரிப்பதுபோன்று   ராணியைப்
பிரித்து மகள்களுக்கு விடை கொடுத்தனர் .
அவர்களை அனுப்புவது   ஜனகபுரி வாசிகளுக்கு
கருணையும் பிரிவும் கூடாரம் போட்டதுபோல் இருந்தது.

சீதை    வளர்த்த கிளிகள் ,
சீதையால் பேசத் தெரிந்த கிளிகள் ,
"சீதை  எங்கே " என்று கேட்டதால்
அனைவரின் சோகம் அதிகரித்தது.
அனைவரும் தைரியம் இழந்தனர்.
சீதை வளர்த்த பறவைகளும் மிருகங்களும்
 இவ்வளவு கவலைப்படும்போது
 மனிதர்களின் நிலை எப்படி இருக்கும்?.

    சகோதரர்களுடன் ஜானகி  அங்கு வந்ததும் ,
       ராஜா ஜனகர் தைரியத்திற்கும் வைராக்கியத்திற்கும்          புகழ் பெற்றவர் .  இருப்பினும்  இன்று
 மகளைப் பிரியும் பொழுது
  ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

 வேதனைப்படும்  தருணம் இதல்ல என அறிந்து   புத்திரிகளை  அன்புடன் ஆரத்தழுவி ,
 அழகாக அலங்கரித்த பல்லாக்குகளை
 கொண்டுவரச் செய்தார்.
எல்லா குடும்பமும்  அன்பினால்  கட்டுண்டிருந்தது.
அரசர் நல்ல நேரம் என அறிந்து
 விநாயகரை தியானித்து
மகள்களை பல்லக்கில் ஏற்றினார்.

  அரசர்  மகள்களுக்கு  அறிவுரை வழங்கி
பெண்களின் தர்மத்தையும்     குல  தர்மத்தையும் எடுத்துரைத்தார்.
சீதைக்குப் பிரியமான நம்பிக்கைக்குரிய பணிப்பெண்களையும்  பணியாட்களையும் உடன் அனுப்பினார்.

  சீதை செல்லும் போது,  ஜனகபுரி மக்கள் கண்  கலங்கினர்.
அங்கு சுப சகுனங்கள் நடந்தன.
 அரசனும் அமைச்சர்களும்  அரசன் ஜனகருடன் ,
சீதையை மாமனார் வீட்டில் கொண்டுவிட சென்றார்கள்.

 நல்ல நேரம் வந்ததும் வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின.
மணமகன் வீட்டார் தேர், யானை,குதிரைகளில் புறப்பட்டனர்.
தசரதர் எல்லா அந்தணர்களையும் அழைத்து அவர்களுக்கு உரிய கௌரவத்துடன்  தானங்கள் கொடுத்தார்.
அரசர் அவர்களின் பாதத் துகள்களை சிரமேற்கொண்டு
ஸ்ரீ கணேசரை வணங்கி , அந்தணர்கள்  ஆசி  பெற்று புறப்பட்டார். .
 மங்களம்  தரும்  நல்ல சகுனங்கள் உண்டாகியது.
தேவர்கள் மகிழ்ந்து பூமாரி  பொழிந்தனர்.
 தேவலோகப் பெண்கள்  பாடினர்.
முரசுகள்  முழங்க தசரதர் ஆனந்தத்துடன்   அயோத்தியாபுரிக்குப் புறப்பட்டார்.
ராஜா தசரதர் கௌரவமுள்ள மனிதர்களைத்
திருப்பி அனுப்பினார்.
      எல்லா யாசகர் களையும்  அழைத்து
நகைகள், துணிகள் ,குதிரைகள், யானைகள் ,
அனைத்தும் அளித்து  தன் அன்பை  உறுதிப் படுத்தினார்.
யாசகர்கள் ராமரின் குலத்தைப்
புகழ்ந்து  வர்ணித்து ராமரை
மனதில் நினைத்துக்கொண்டே சென்றனர்.
தசரதர்  ஜனகரையும் திருப்பிச் செல்ல வற்புறுத்தினார் , ஆனால் ஜனகர் அன்பின் வயப்பட்டு
திரும்ப விரும்பவில்லை.
 மிக தொலைவு சென்றதும் தசரதர் ஜனகரிடம்  மீண்டும் திரும்பிச்  செல்ல  வேண்டும்   எனக் கேட்டார்.
அவரின் கண்களில் இருந்து அன்புக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

  இதைப் பார்த்த  ஜனகர் கைகூப்பி
அன்பு என்ற அமிர்தத்தில்
மூழ்கிய சொற்களால் --
 "நான் எப்படி  வேண்டுகோள் விடுப்பேன்.
மகாராஜ்! நீங்கள் என்னை மிகவும் பெருமைப்
படுத்திருக்கிறீர்கள்". என்றார்.

தசரதர் தன் சம்பந்திக்கு   எல்லாவித மரியாதையும் செய்தார். சம்பந்திகள் தங்களுக்குள் சந்திப்பதில் மிகவும் பணிவையும் அன்பையும் காட்டினர்.

 ஜனகர் முனிவர்களை வணங்கி
 எல்லோரின் ஆசிகளைப் பெற்றார்.
பிறகு மரியாதையுடன் தன்
 நான்கு மாப்பிள்ளைகளைச்  சந்தித்தார் .
 தன் மென்மையான தாமரை போன்ற
 கரங்களைக்கூப்பி
அன்பிலேயே பிறந்தவர் போன்று ,
அன்பான குரலில் பேசினார்-- --
ஸ்ரீ ராமரே! உங்களை எந்த விதத்தில் புகழ்வேன்?
 நீங்கள் முனிவர்கள் மேலும் மகாதேவரின் மனம்
என்ற மானசரோவரின் அன்னப்பறவை.
 உங்களின் கருணைக்காக  யோகிகள்  கோபம், மோகம், அன்பு ,ஆணவம் அனைத்தும் விடுத்து யோகசாதனை செய்கிறார்கள்.
சர்வவியாபகர், பிரம்மா, வெளிப்படாதவர், அழியாதவர், சிதானந்தர், உருவமற்றவர், உருவமில்லாதவர்.
குண நிதி.
இதற்கு சரியான மனம் விரும்பும் சொல் இல்லை. எல்லோரும் யூகிக்கவே முடியும். யாரும் விவாதிக்க முடியாது. வேதங்கள் முக்காலங்களிலும் மாற்றமில்லாதவர் என்று வர்ணிக்கிறது.
நீங்கள் தான் அனைத்து சுகங்களுக்கும் மூலம். கடவுளுக்கு  அனுகூலமாக இருந்தால்  உலகில் உள்ள ஜீவன்களுக்கு எல்லாம் லாபமே லாபம்.

    நீங்கள் எனக்கு பல விதத்திலும் பெருமை அளித்தார்கள்.
நீங்கள் எங்களை தன் மக்களாக அறிந்து ஏற்றுக்கொண்டீர்கள். கோடிக்கணக்கான யுகங்களுக்கும் உங்கள் குணம் பாடினாலும் மகிமை முடியாது.
நீங்கள் சிறிதளவு அன்பு காட்டினாலும் நீங்கள்  மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் பலமும்  மகிமையும் அதிகம்.
என்  மனம் மறந்தும் கூட உங்கள்  சரணங்களை விட்டுவிடக்கூடாது.
ஜனகரின் சிறந்த சொற்களைக்  கேட்டு  அன்பில் கட்டுண்ட ராமர்  மிகவும் திருப்தி அடைந்தார்.
ராமர் ஜனகரை தன் தந்தை தசரதர், குரு விஷ்வாமித்திரர்,குல குரு வசிஷ்டர் ,போன்றே
சமமாகக்  கருதி  கௌரவம் அளித்தார். பிறகு பரதரை
சந்தித்தார். ஆசிர்வாதம் செய்தார்.
விஷ்வாமித்திரரின் காலில் விழுந்து வணங்கினார்.
பிறகு முனிவரிடம் சொன்னார் ---உங்களுடைய தரிசனத்தால்  நடக்க முடியாதது எதுவும் இல்லை.
 உங்களால் எனக்கு எளிதாக சுகமும் புகழும் கிடைத்துவிட்டது.
 எல்லா சித்திகளும் உங்களைப் பின் தொடருபவை.
 இவ்வாறு புகழ்ந்து ஆசிபெற்று சென்றார்.
 வரும் வழியில் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
கிராமங்களில் ஆண்கள்-பெண்கள் ஸ்ரீ ராமச்சந்திரரை
பார்த்து மிகவும் மகிழ்ந்தனர்.   அங்கங்கு முகாம் போட்டு வழியில் உள்ள மக்களுக்கு ஆனந்தம் அளித்து  நல்ல நாளில் அயோத்தியாவை அடைந்தனர்.
முரசுகள் முழங்கின. மத்தளங்கள் முழங்கின.
சங்குகள் முழங்கின. யானைகள் பிளிறின.
குதிரைகள் கனைத்தன.
ஜால்ரா, சிறிய பறை ,சஹ்னாய் போன்ற
வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
மணமகன்  திரும்பி வந்ததை அறிந்து நகரமக்கள் மகிழ்ந்தனர்.எல்லோரும் தங்கள் வீடுகள், கடைத்தெருக்கள்,தெருக்கள், நாற்சந்திகள் நகர நுழை வாயில்கள், அனைத்தையும் அலங்கரித்தனர்.
 எல்லா வீடுகளிலும் வாசனை திரவங்கள் தெளிக்கப்பட்டன.
தோரணங்கள், கொடிகள் ,பதாகைகள்
 போன்றவற்றால் அலங்கரித்தனர்.

     பூக்கள், பழங்கள், காய்களுடன் கூடிய
பாக்கு மரம்,வாழை ,மா ,மகிழம்பூ,கதம்ப மரம்,இலவங்கம்  போன்ற மரங்கள் நடப்பட்டன.
பழங்களின் சுமையால் அவை பூமியை ஸ்பர்சித்துக் கொண்டிருந்தன.
மணிகள் வைக்கும் தாம்பாளங்கள்
மிகவும்  வேலைப்பாடு நிறைந்ததாக இருந்தன.
பலவித மங்கள கலசங்கள் ஒவ்வொரு வீட்டிலும் அலங்கரிக்கப்பட்ட  ஸ்ரீ ராமச்சந்திரரின்   அயோத்யா நகரத்தைப் பார்த்து பிரம்மா முதலிய தேவதைகள் பொறாமைப் பட்டனர்.
அரண்மனை மிக அழகாககக் காட்சியளித்தது. அதன் அமைப்பைக்கண்டு காமதேவனின் மனம் மிகவும் மோஹித்தது.  இயற்கை அழகே வடிவெடுத்து தசரதர் அரண்மனையில் வந்ததுபோல்  மங்கள சகுனங்கள் , அழகு,
செல்வத்தின் செழுமை ,சுகம் , வளம் போன்ற உற்சாகங்கள் காணப்பட்டன. ராமர் -சீதையின் தர்சனத்தை விரும்பாதவர்கள் இருப்பார்களா ?!
 மிக அழகாக ரதியையே அவமதிக்கும் அளவிற்கு சுமங்கலிப்
பெண்கள்  கூட்டம் கூட்டமாக வந்தனர். சரஸ்வதிதேவியே வந்து பல வேடங்களில் பாடிக்கொண்டிருந்தாள்.அனவைரும் ஆரத்தி தட்டுகளுடன் மங்கள திரவியங்களுடன்  இனிய கீதங்கள் பாடிக்கொண்டிருந்தன.

   அரண்மனை முழுதும் ஆனந்த ஆரவாரங்கள்.கௌசல்யா மற்றும்  ராமரின் அன்னைகள் ஆனந்தத்தில் தன்னையே
மறந்து மெய்மறந்து அன்பில் திளைத்திருந்தனர்.

  கணேசருக்கும் திரிபுராரி சிவனுக்கும்  பூஜை செய்து அந்தணர்களுக்கு அதிக தானம் அளித்தனர்.
 அதிக சுகம் மற்றும் ஆனந்தத்தின் காரணமாக ,
ராமரைப்பார்க்கும் ஆர்வ மிகுதியால் எல்லா
உடல் தளர்ந்த காணப்பட்டனர்.அவர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் அலங்காரம் செய்வதில் ஈடுபட்டனர்.
ராணி சுமித்திரை அனைத்து மங்களப் பொருள்களான
மஞ்சள், அருகம்புல், இலைகள்,வெற்றிலை ,பாக்கு,அக்ஷதை,
முளைப்பாரி,கோரோசனை,உலோகக் கசண்டு,துளசியின் அழகான தளிர் இலைகள்,அலங்கரித்து வைத்தார்.

பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட ஸ்வர்ண கலசங்கள்  காமதேவனின் பறவைகள் கூடுகள் கட்டியது போல் காட்சியளித்தன.
  வாசனைப் பொருட்களின்  மணம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. எல்லா ராணிகளும் ஆரத்தி ,அலங்காரம் செய்து மங்களப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
தங்கத் தம்பாளங்களில் மங்களப்  பொருள்கள் அலங்கரித்து திருஷ்டி கழிக்கச் சென்றனர். அவர்களின் உடல் ஆனந்தத்தால் புல்லரித்தது.
தூபப் புகையால் ஆகாயம் கருத்துத் தென்பட்டது. ஆவணிமாத மேகங்கள் திரண்டு வந்ததுபோல்   இருந்தன.

தேவர்கள் கல்பவிருக்ஷத்தின் பூமாலைகளை மழையாகப்
பொழிந்தனர். அழகான மணி மாலைகள் வானவில் போல்
காட்சி அளித்தன. மேல் மாடிகளின் அறைகளில் இருந்து
பெண்கள் மின்னல்கள் மின்னுவது போல்  வந்து போய்க்கொண்டிருந்தனர்.
முரசொலி மேக கர்ஜனைபோல் இருந்தது. யாசகர்கள் வானம்பாடி, தவளை, மயில் போல்  இருந்தனர்.
தேவர்கள் பவித்திரமான மணமுள்ள மாரி பொழிந்தனர்.
மழையை எப்படி நிலமகள் மகிழ்ச்சியாக வரவேற்பு
செய்வாளோ ,அப்படியே நகரத்தின் ஆண்களும் பெண்களும்
மகிழ்ந்தனர்.

நல்லநேரம் வந்ததும் வசிஷ்டர் ஆக்ஞை பிறப்பித்தார்.
அப்பொழுது ரகு குலத்தின் சிரோமணியான தசரதர் கணேசன்,சிவன்,பார்வதியை வேண்டி தன் பரிவாரங்களுடன் ஆனந்தமாக நகருக்குள் நுழைந்தார்.
நல்ல நேரம்.தேவர்கள் துந்துபி வாசித்தனர். பூமாரி பொழிந்தனர். பாட்டு பாடுபவர்கள் , நட்டுவனார்கள் ,அனைவரும் ஸ்ரீ ராமச்சந்திரன் புகழ் பாடிக்கொண்டிருந்தனர்.
வெற்றி வெற்றி முழக்கமும் ,வேத கோசங்களும் பத்து திக்கு
களிலும் ஒலித்தது. பலவித வாத்தியங்கள் மங்கள ஒலி எழுப்பின . மணமகன் ஊர்வலத்தினரின் ஆடம்பரமும்  ஆடைகளும்  அலங்காரமும் வர்ணிக்க முடியாது.

No comments: