Friday, February 3, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் - அ றுபத்தொன்பது

   ராமசரிதமானஸ் -பாலகாண்டம்  -  அ றுபத்தொன்பது
..................................................................................................................................

   சீதையை அழைக்க தோழிகள் சென்றனர்.

சீதை   அழகின்  மற்றும் குணத்தின்  சுரங்கம் .
ஜகஜ்ஜனனி  ஜானகியின் அழகை வர்ணிக்க முடியாது.
துளசிதாசருக்கு  காவியத்தின் அனைத்து உவமான உவமேயங்களும் மிகவும் துச்சமாக இருந்தன,  ஏனென்றால்

லௌகீகப் பெண்களின் எல்லா உவமைகளும் தெய்வீகத்திற்கு  சரியாகாது.
 காவியத்தின் உவமைகள்
எல்லாமே மாயை உலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
முக்குணங்களைக் காட்டுபவை.
அவைகளைக் கொண்டு
தெய்வத்தின் ஸ்வரூப சக்தியான
 ஸ்ரீ ஜானகியின் இயற்கைக்கு ஒவ்வாத,
தெய்வீக அங்கங்களுக்கு ஒப்பிடுவது
இறைவனை அவமானப்படுத்துவது.
அவ்வாறு வர்ணித்தால்  கெட்ட கவி ஆகிவிடுவார் .
இகழ்ந்து  விடுவார்கள் .
மற்ற பெண்களுடன் ஒப்பிடும்
அளவிற்கு அழகானவர்கள்
 இந்த  ஜகத்தினில் இல்லை.
இந்த புவியில்  மட்டுமல்ல  
தேவலோகத்திலும் கிடையாது.

சரஸ்வதியுடன்  ஒப்பிட நினைத்தால்  சரஸ்வதி வாயாடி.
பார்வதியுடன்  ஒப்பிட நினைத்தால் ,
தேவியின் பாதி அங்கம் ஆண்களுடையது.
ரதியுடன் ஒப்பிட நினைத்தாலும் அவள் கணவன்
அங்கமில்லாததால் மிகவும்  வருத்தப்படுபவள் .
விஷம்-மது போன்ற சகோதரர்கள்  லக்ஷ்மிக்கு இருப்பதால்
லக்ஷ்மி போன்று ஜானகியை ஒப்பிடமுடியாது.
லக்ஷ்மி தோன்றியது உப்புள்ள சமுத்திரத்தில் இருந்து.
சமுத்திரத்தைக்   கடைய  கடினமான முதுகைக் கொண்ட உருவமாக பகவான்  மாறினார்.
கடைய கயிறாக விஷமுள்ள வாசுகி மாறியது.
 அதை கடைந்தவர்கள்  அரக்கர்களும் தேவர்களும்.
அதிசய அழகின் சுரங்கம் ஒப்பில்லா அழகி லக்ஷ்மி ,
அவர் வெளிப்பட காரணங்கள் இந்த அழகற்ற ,கடினமான உபகரணங்கள். இப்படிப்பட்ட உபகரணங்களால் உண்டான இலக்குமியை சீதையுடன்  ஒப்பிட முடியாது.
அழகான ஆமை, அழகான கயிறு , சிருங்கார ரச மலை யாக காமதேவன் கடைந்து எடுத்தாலும் அழகான பொருட் செல்வமுள்ள  லக்ஷ்மி தோன்றினாலும் கவிஞர்கள் லக்ஷ்மியை சீதைக்கு  சமமாக  சொல்லமாட்டார்கள்.

   தோழிகள் பாட்டுப்பாடிக்கொண்டே சீதையை அழைத்துவந்தனர். சீதை ஜகத் ஜனனி  அழகான புடவை உடுத்தி வந்தாள்.  அந்த  மேன்மை பொருந்திய அழகு
ஒப்பிடமுடியாதது.
ஒவ்வொரு அங்கத்திற்கும் உரிய ஆபரணங்களைத்  தோழிகள்   மிக நேர்த்தியாக அணிவித்திருந்தனர் .
அந்த ஸ்வயம் வர மண்டபத்தில்  சீதை வந்ததுமே ,
அவருடைய தெய்வீகமான தோற்றம் கண்டு ஆண்களும் பெண்களும் அவர் மீது மோகம் கொண்டனர்.
 தேவர்கள்  மகிழ்ந்து  முரசு வாசித்தனர். தேவகன்னிகைகள் மலர் தூவி பாடினர்.
  சீதை ஆச்சரியத்துடன்  ராமரைப் பார்க்கத்   தொடங்கினார். .
அப்பொழுது எல்லா அரசர்களும் மோகவசத்தில் இருந்தனர். இரண்டு சகோதரர்களையும் சீதை
கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் குரு மற்றும் சபை மரியாதையால்  நாணம் அடைந்து  தோழிகளின் பக்கம் திரும்பி ,
மனக்கண்ணால் ராமனைப் பார்த்து ரசித்தார்.
   









No comments: